ஈன்ற பொழுதின் பெருந்துவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்
தன் மக்களைப் பிறர் ‘அறிவொழுக்கங்களில் சிறந்தவன்’ என்று சொல்லக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விட மிக்க மகிழ்ச்சி அடைவாள். இந்த திருக்குறளுக்கு மிகச்சரியாக பொருத்தமானவர் என்று நாம் பார்க்க இருக்கும் ‘குறளரசி லிட்க்ஷிதா’. தமிழ் மொழி மீதான நாட்டம், தமிழ் மக்களாகிய நமக்கு எப்பொழுதுமே அதிகப்படியாக இருக்கும்.ஆனால், அவற்றை இன்று எத்தனை பேர் பிழை இல்லாமல். பேசவோ, எழுதவோ முடியும் என்றால் கேள்விக்குறியே. ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, தமிழ் என் தாய்மொழி, அதன் சிறப்பை நான் அறிவேன், மற்றவர்களுக்கும் அறிவுறுத்துவேன் என்று மிகச்சிறிய வயதினிலே அதனை செயல்படுத்தி வருகிறார் என்று நாம் காண இருக்கும் லிட்க்ஷிதா.
வாழ்க்கையில் வெற்றி என்றால் என்ன? பொதுவாக, மிகுந்த செல்வம், உயர்ந்த பதவி, சிறந்த புகழ் ஆகியவற்றைப் பெறுவது, சமுதாயத்தில் பிறரால் மதிக்கப்படுவது, பாராட்டப்படுவது போன்றவை நடைபெற்றால், ஒருவன் வாழ்க்கையில் வெற்றிபெற்றவனாகக் கருதப்படுகிறான். ஆனால், வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுவேறாக இருக்கலாம். உதாரணமாக, ஒருவன் மிகுந்த புகழ் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியலில் ஈடுபட்டுத் தவறான முறையில் மிகுந்த செல்வம் சேகரித்துப் பலராலும் இகழப்பட்டால், அவன் தன்னை வெற்றி பெற்றவனாகக் கருதமாட்டான். அதுபோல், ஒருவன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு அரசியலில் ஈடுபட்டு, மிகுந்த புகழடைந்தாலும், அவன் பலமுறை தேர்தல்களில் தோல்வி அடைந்தால், அவன் தன்னை வெற்றி அடைந்தவனாகக் கருதமாட்டான். ஆகவே, ஒருவன் எதைத் தன்னுடைய வெற்றி என்று கருதுகிறானோ அதை அடைந்தால்தான் அவன் தன்னை வெற்றிபெற்றவனாகக் கருதுவான்.
வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்குமானால், அனைவரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கேற்ற பொதுவான வழிமுறைகள் உண்டா? கண்டிப்பாக உண்டு ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை வேறுபாடாக அமைந்தாலும் அவற்றின் மிகப் பொதுவாக அமைவது ஒவ்வொரு மனிதனும் நன்னெறியுடன் வாழ வேண்டும் என்று இவற்றை நாம் சிறப்பாக அறிந்து கொள்ள பல வகையான புத்தகங்கள் அறிஞர்களின் கருத்துகள் போன்றவற்றை நினைவு கூர்ந்தாளே அவற்றின் அடிப்படை தத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். வாழ்க்கையின் அறநெறித்துவத்தை இரண்டு அடிகளில் மிகச்சரியாக ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, அழகான தமிழ்மொழியில், அனைவருக்கும் புரியும் விதத்தில், இன்று உலக பொதுமறையாக போற்றப்படும் திருக்குறள் மூலம் திருவள்ளுவர் நமக்கு கூறிச் சென்றுள்ளார். ஒரு மனிதன் அறமுடன், சிறப்பு பெற்று வாழ அவற்றை பின்பற்றினால் போதும். லிட்க்ஷிதாவின் தமிழ் ஆர்வமும் அதனை அவர் கற்றுக் கொள்ளும் பண்பும் மிக சிறிய வயது முதலே தொடங்கியுள்ளது. கொரோனா என்ற பெருந்தொற்று மூலம் சமூகத்தில் பல்வேறு விதமான மாற்றங்கள் வந்தன. அந்த காலகட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டது சிறுவர்கள் மற்றும் பெரியவர்களே. சிறுவர்களின் கல்வி கற்கும் முறை, பொதுவான வாழ்க்கை முறை அனைத்திலும் பல்வேறு வகையான வேறுபாடுகள் அமைந்தன. அக்காலகட்டங்களில் இணையதளத்தின் மூலம் கல்வியானது கற்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை, கைபேசியின் பயன்பாடு அதிகமாகவே அமைந்தது. இதில் சில குறைபாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, தன்னம்பிக்கையுடன் தனக்கான பாதை என்னவென்று கண்டறிந்து, தன் தாயின் உதவியுடன், தினமும் ஒரு திருக்குறள் கற்பதோடு மட்டுமல்லாமல், தன்னைச் சார்ந்தவர்களுக்கும், அதை கதையின் மூலமாக விளக்க தொடங்கினார். ஆரம்ப காலங்களில், அவர் வைத்திருந்த பொம்மைகளுக்கு மட்டுமே தான் படித்த கதைகளை கூறிக் கொண்டு வந்தவர், நாளடைவில் அதன் மேல் ஏற்பட்ட ஒரு ஈர்ப்பின் காரணமாக அதன் கருத்துகள் மற்றும் விளக்கங்களை தன் தம்பி நண்பர்கள் சுற்றியுள்ளவர்களுக்கும் கற்பிக்க ஆரம்பித்தார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக சமூகத்தின் இடைவெளியை கடைப்பிடித்து ஒருவரை ஒருவர் நம்மை பாதுகாப்பது நமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது . அந்த நேரத்தில் நம்மை சுற்றி இருப்பவரையும் பெரியோர்களையும் சிறியவர்களையும் தொலைக்காட்சி மற்றும் கைப்பேசியில் நேரத்தை போக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கார்ட்டூனில் வரும் வசனத்தையும் திரைப்படங்களில் வரும் நகைச்சுவை வசனத்தையும் குழந்தைகள் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. இதில் லிட்க்ஷிதாவும் அடக்கம். குழந்தைகள் இயல்பிலேயே, தான் கேட்கும் வார்த்தைகளை, மிக சுலபமாக, கற்கும் திறனை உடையவர்கள் என்பதை கருத்தில் கொண்டு, லிட்க்ஷிதாக்கு, பெற்றோர்களால் தினம் ஒரு திருக்குறள் மற்றும் அதன் அர்த்தங்களுக்கு ஏற்ப கதைகளும் விவரிக்கப்பட்டது. அதில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, சுயமாகவே தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதை சார்ந்த கதைகளை மிக சுலபமாக லிட்க்ஷிதா தானே கற்றுவந்தார். நேற்றிய கதை என்ன? இன்றைய கதை என்ன? திருக்குறளில் வரும் ஏழு வார்த்தையில் இவ்வளவு அர்த்தம் இருக்கின்றதா! என ஆர்வமாக படிக்க ஆரம்பித்தார். அப்படி தினமும் திருக்குறள் கற்பிக்கும் எண்ணம் அதிகமாக வரத் தொடங்கியது. 2020ல், ஆறு வயதில் அவருடைய பயணம் தொடங்கியது. அதனை ஊக்குவிக்கும் விதமாக 2021 இல் மாம்ஸ்ப்ரெஸ்ஸோ தமிழ் இணையதளத்தின் மூலமாக, இவருடைய திறமைகள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு தலைப்பில், பாரதியார் பாடல், பக்தி பாடல், 60 வினாடியில் தேசிய தலைவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் கூறுதல், பேச்சு போட்டி என பல்வேறு விதமான தமிழ் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு, பல பாராட்டுகளையும், பரிசுகளையும், வெகுமதிகளையும் பெற்றுள்ளார். மேலும் இவருடைய வசீகரமான பேச்சு, அதற்கேற்ற அழகிய பாவனைகள், ஆழமான கருத்துக்கள் கொண்ட வார்த்தைகள், எழுத்து உச்சரிப்பு போன்றவை இவருக்கு மேலும் பெருமை சேர்த்தன. இப்பொழுதும் பாரதியார் பாடலின் வரிகளை காண கூகுளில் வலைத்தளத்தில் லிட்க்ஷிதா என தட்டச்சு செய்தால், நாம் அதைக் காணலாம்.திருக்குறளோடு சேர்ந்து, பாரதியார் பாட்டு பாடுவதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். லிட்க்ஷிதா தனது ஏழு வயதில் திருக்குறள் கற்பித்து, “அப்துல் கலாம்-கனவு மாணவர் விருது” பெற்றார். தனது ஏழு வயதில் “திருமதி.ஜோதிநிர்மலாசாமி(IAS) அவர்கள் முன்னிலையில் திருக்குறள்கள் கூறி, விருதுகள் பெற்றுள்ளார்.பள்ளியில் ஆங்கிலவழி கல்வி என்றாலும், தமிழ் ஹிந்தி போன்றவற்றில் அதிக ஆர்வம்காட்டி பாடநூல்கள் அல்லாது, இதர போட்டிகளிலும் முதன்மை இடத்தை பெற்று வருகின்றார். தற்பொழுது பரதநாட்டியம், ஹிந்தி போன்றவற்றில் முறையாக கற்று, சரியான தேர்வுகளை எழுதி, அடுத்தடுத்த நிலைகளை கற்று கொண்டுள்ளார். நான்கு நிலைகள் முடித்து, ஐந்தாவது நிலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். திருக்குறள் பற்றிய அறிவும், சிந்தையான கேள்வியும் தினமும் 15 நிமிட உரையாடல் என்றாலும், வாழ்க்கையின் மிக முக்கியமான அனைத்து விடயங்களையும் கற்றுத் தருவதாக அமைந்துள்ளது.
வாழ்க்கையில் வெற்றிக்கு, வள்ளுவர் காட்டும் வழியினை தேர்ந்தெடுத்து, இன்றைய குழந்தைகளுக்கு உதாரணமாக, அமைந்த லிட்க்ஷிதாவிற்கு நம் மகளிர் சுயதொழில் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள். மேலும் குழந்தைகள்தான் நம் நாட்டின் கண்கள், அவர்களின் முன்னேற்றம் தான் ,நாட்டின் முன்னேற்றம் மற்றும் பண்பாட்டினை அடுத்தகட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும். இதன் அடிப்படையில், சரியான நேரத்தில், சரியான சரியான பாடங்களை கற்றுக்கொடுக்கும் லிட்க்ஷிதாவின் பெற்றோர்களுக்கு, நம்முடைய வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் மென்மேலும் வளர்ச்சி அடைந்து. ,வெற்றி பெற வாழ்த்துகிறோம்.


